வியாழன், நவம்பர் 03, 2011


الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. திருக்குர்ஆன்: 13:28

இறைவனை நினைவு கூரக்கூடிய இதயமே அமைதி பெறுகிறது
இறைவனை மறந்த இதயம்  அலைமோதுகிறது
உலகில் அனைத்து வளங்களையும் ஒருங்கேப்பெற்ற செல்வந்தனாகிலும் சரி, அன்றாடங் காய்ச்சியாகிலும் சரி, அல்லது அதையும் பெற்றுக் கொள்ள முடியாத யாசிப்போராகிலும் சரி, அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனையை எதிர் கொள்பவர்களாகவே இருக்கின்றனர்.

செல்வந்தர்களின் மனநிலை
ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கி சின்னப் பின்னப் படுத்தி, தனது கைப்பாவையை ஆட்சியில் அமர்த்திய சில தினங்களில் ஆப்கானிஸ்தானின் ராட்சத மலைப் பொதும்புகளிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்களால் தினந்தோறும் சல்லடையாக்கப்பட்டு கூடை கூடையாக அல்லப்படும் அமெரிக்க ரானுவ வீரர்களின் சடலங்களைக் கண்டு ஒழித்துக் கட்ட வேண்டியவர்களை ஒழித்துக்கட்ட முடியவில்லையே என்ற மனக்கவலை ஒரு புறம்,

ஈராக்கை அடித்து சல்லடையாக்கி சதாமை தூக்கிலிட்ட அடுத்த கணமே தலைதூக்கிய ஈரானுடைய டார்ச்சரை பதவியை விட்டு இறங்குவதற்கு முன் ஒரு கை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற மனக்கவலையில் உறைந்திருக்கும் சர்வதேச குண்டன் ஜார்ஜ் புஷ்ஷின் மனக் கவலை.

ஹெலிகாப்டர் இறங்கி செல்வதுப் போன்று சுமார்  400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மும்பையின் பிரதானப் பகுதியில் வடிவமைத்த உல்லாச பங்களாவின் மாடியின் மீது ஹெலிகாப்டர் இறங்குவதற்கு அரசு அனுமதி மறுத்து விட்டதால் அது மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக இன்று உலகில் பணக்காரர்களுடைய வரிசையில் முண்ணனியில் இருக்கின்ற அம்பானி சகோதரர்களுடைய மனக் கவலை.

இணைந்திருக்கும் போது டாட்டாவை மிரட்டினோம் பிரிந்தப் பின் ஒரு ஆட்டோக் காரனைக் கூட மிரட்ட முடியவில்யே என்று மதுரை மாநகரை தனது சுண்டு விரலில் வைத்து ஆட்டிப்படைக்கும் அழிகிரியைப் பார்த்து ஆதங்கப்படும் உலகின் பணக்காரர்களுடைய வரிசையில் இருக்கும் தயாநிதி மாறனுடைய வெளியில் சொல்ல முடியாத மனக் கவலை.

தனது நாசியிலிருந்து வெளிப்படும் மூச்சுக் காற்றைக்கூட உயிர் தோழியிடம் கேட்டுவிடும்; ஜெயலலிதாவால் அவருக்காக வடிவமைத்த கொடநாடு உல்லாச பங்களாவுக்குள் அவரை அமர்க்களமாக குடியமர்த்த முடியவில்லையே என்ற மனக்கவலை.

இப்படி உலகில் உள்ள பெரும், பெரும் பணக்காரர்கள் அனைவரையும் எதாவது ஒரு மனக்கவலை ஆட்டிப் படைத்துக் கொண்டுதானிருக்கின்றது.

அவர்களைப் பொறுத்தவரை நினைத்ததை சாதித்தே ஆகவேண்டும்; என்று துடிப்பார்கள் அதற்கு காரணம் அவர்களிடம் குவிந்து கிடக்கும் செல்வங்கள்.

நினைத்ததை சாதிக்க முடியவில்லை என்றால் இத்தனை செல்வமிருந்தும் என்னால் இதை சாதிக்க முடியவில்லையே என்று துவண்டு விடுவார்கள். இதுவே மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து அது த்த அழுத்தத்தை ஏற்படுத்தி அது அவர்களுடைய அகால மரணத்திற்கு வித்திடுகிறது.

அன்றாடங்காய்ச்சிகள் ...
  • காலையில் உண்டால் மதியம் இல்லை,
  • மதியம் உண்டால் இரவுக்கில்லை,
என்பவர்களுடைய மனநிலையோ பதட்டத்திலும் பதட்டம்,
  • வாடகை வீட்டில் வசிப்போருக்கு சொந்த வீடு வேண்டும் என்ற மனக் கவலை,
  • சொந்த வீட்டை கட்டி விட்டாலோ ஒரு விளை நிலம் வாங்க வேண்டும் என்ற மனக் கவலை,
இவ்வாறு மனிதர்களுடைய ஆசைகள் விரிவடைய விரிவடைய அந்த ஆசைகளில் சிலது வெற்றிப் பெற பலது தோல்வியை தழுவுவதால் துவண்டு விடுகின்றார்கள்.

மொத்தத்தில் மனிதர்கள் தேவையுடையவர்களாக, அல்லது ஏதாவதொன்றில் அதிருப்தி  அடையவர்களாக இருக்கின்றார்கள் இவைகளே மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன மேல்படி மன அழுத்தமே இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன அது அதிகிரிக்கும் பொழுது உயிருக்கே உலை வைத்து விடுகின்றன.

நாம் அன்றாடம் எதிர்நோக்குகின்ற அனைத்து பிரச்சனைகளையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனிடம் ஒப்படைத்து விட்டால் மன அழுத்தம் ஏற்படாது.

நபி(ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், '(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'எந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!'' என்று கேட்டார்கள். நூல்: புகாரி. 3653.

மிகவும் நெருக்கடியான நிலை ஏற்பட்டால் அதைக்கண்டு துவண்டு விடக்கூடாது சில காரியங்களை மனிதன் என்ற முறையில் நம்மால் சாதிக்க முடியும், பல காரியங்களை நம்மால் சாதிக்க முடியாது அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடவேண்டும்.

இறைவனுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக தங்களுடைய உயிரையே பணயம் வைத்துப் போராடும் அந்த சத்திய சீலர்கள் 'தவ்ர்' மலைக்கடியில் உள்ள பாதை வழியாக சென்று அமர்ந்து விடுகிறார்கள் அவர்கள் உட்புகுந்த அந்த பாதையைச் சுற்றியே நீண்ட நேரம் வட்டமிடும் எதிரிகளுடைய பார்வையை கீழ்நோக்க விடாதவாறு அல்லாஹ் தடுத்து விடுகிறான். அதற்கு காரணம் நாம் இருவர் மட்டும் இங்கில்லை நம்முடன் இறைவன் இருக்கின்றான் என்ற பெருமானார்(ஸல்) அவர்களுடைய நம்பிக்கையின் காரணத்தால் இறைவன் தனது ஆற்றலை அங்கு வெளிப்படுத்துகிறான்.

இறைவனை நம்ப வேண்டிய முறையில் நம்பிவிட்டால் அந்த பரம்பொருள் ஒருக்காலும் யாரையும் கைவிடாது என்பதற்கு மேற்காணும் வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் பெரிய முன்னுதாரணமாகும்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்திற்காக நிதி திரட்டிக் கொண்டிருந்த போது அபுபக்கர் (ரலி) அவர்கள் ஒரு கைலியை விரித்து வீட்டில் இருந்தவற்றை எல்லாம் அதிலிட்டு அதன் நான்கு மூலைகளையும் கட்டி தோளில் தொங்க விட்டுக் கொண்டு வந்து அண்ணலார் அவர்களிடம் கொடுக்கிறார்கள் வீட்டில் எதையாவது வைத்துவிட்டு வந்திருக்கின்றீர்களா என்று அண்ணலார் அவர்கள் கேட்க ? அதற்கவர்கள் வீட்டில் அல்லாஹ்வை வைத்து விட்டு அனைத்தையும் கொண்டு வந்து விட்டேன் என்ற பதிலை அளிக்கிறார்கள்.

உலகில் உள்ள அனைத்து மக்களுடைய இறைநம்பிக்கையை தராசின் ஒரு தட்டிலும், எனது தோழர் அபூபக்கருடைய இறைநம்பிக்கையை மற்றொரு தட்டிலும் வைத்தால் எனது தோழர் அபுபக்கருடைய ஈமான் நிரப்பப்பட்ட தட்டே கனக்கும் என்று பெருமானார்(ஸல்)அவர்கள் அபுபக்கர்(ரலி) அவர்களுடைய இறைநம்பிக்கையை சிலாஹித்துக் கூறி இருக்கின்றார்கள்.

நாளைக்கு என்ன செய்வது ?
எதிர்காலத்திற்கு எதை விட்டு வைப்பது ? என்ற திட்டமிடலில் இறங்காமல் இன்றைய பொழுதை எவ்வாறு கழிப்பது என்பதையும் கூட இறைவனிடம் ஒப்படைத்து விட்டு வாழ்நாளைக் கழித்த அபுபக்கர்(ரலி) அவர்களுடைய வாழ்நாளில் நடந்த சம்பவங்கள் அனைத்துமே மெய்சிலிர்க்க வைக்கக் கூடியதாக இருக்கும்.

எந்த ஒரு எதிர்ப்பையும் கண்டு இதை எப்படி சமாளிப்போம் ? என்ற கவலையினால் அவர்கள் துவண்டு விழுந்து விடவில்லை. அவைகள் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் அவர்கள் நோய்வாய்பபட்டதாக வரலாறு இல்லை இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன் மலைபோன்ற பிர்ச்சனைகளை எல்லாம் மிக சாதாரணமாக எதிர்கொண்டார்கள். 

வல்ல அல்லாஹ் அவைகளை தூள் தூளாக தகர்த்தெறிந்து மாபெரும் வெற்றியை நல்கச் செய்தான்.

இறைவனை வீட்டில் வைத்து விட்டு எஞ்சி இருந்த செலவங்களை துடைத்து இறைவழிக்கு வாரி வழங்கிய அவர்களுடைய சிந்தனைக்கொப்ப சிறப்பான வாழ்க்கையை இறைவன் அமைத்துக் கொடுத்தான்

ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் மறுமை வாழ்வை மறந்து உலக வாழ்வை வளப்படுத்துவதற்காகவும், அன்றாடம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளிலும் வெற்றி அடைந்த விடவேண்டும், தோல்வி என்பதே நம் வாழ்வில் இருக்கக் கூடாது என்ற வைராக்கியத்தினால் இறைவனை மறந்து தீட்டப்படும் திட்டங்களில் பல தோல்வியை தழுவி விடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

என்ன தான் வழி ?
பொழுது புலர்ந்ததும் உயிர் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறியவர்களாக எழுகிறோம், அப்பொழுதே மாலைப் பொழுது நமக்கல்ல என்ற சிந்தனை வந்து விடவேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்றார்கள்.

''நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள். நூல்: புகாரி 6416. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள்.


அவ்வாறான சிந்தனை வந்தால் மட்டுமே அதற்கடுத்து தொழுகையை இறையச்சத்துடன் நிறைவேற்ற முடியும், அதற்கடுத்து காலை திக்ரை ஓதமுடியும், அதற்கடுத்து ஹலாலான உணவை தேட முடியும். இதற்கு மேல் எழுகின்ற பண நெருக்கடி, வேலையில் ஏற்படும் நெருக்கடி, குடும்பத்தில் ஏற்படுகின்ற சிக்கல்கள், ஆரோக்கியம் அல்லது பாதுகாப்பு தொடர்பான கவலைகள், அந்தரங்க உறவுகளில் ஏற்படுகின்ற சவால்கள்நம்மை எதிர் கொள்ளும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை இறைவனிடம் ஒப்படைத்து விட்டு களப் பணியில் இறங்கினால் இறைவன் வெற்றியை வழங்குவான்.
 
...அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். திருக்குர்ஆன்.4:81

... ''அல்லாஹ் எனக்குப் போதுமானவன் சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருங்கள் என்றுக் கூறுவீராக! திருக்குர்ஆன்.30:38 
.
..  அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.   திருக்குர்ஆன்.4:132


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்